ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இ-சிகரெட்டிற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அத்துடன் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை அளிப்பது குறித்த முடிவும் எடுக்கப்பட்டது. அதன்படி ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்கப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக மத்திய அரசிற்கு 2024 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர், “11.52 லட்ச ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்பட உள்ளது. இது ரயில்வே துறையின் உற்பத்திக்கு கிடைத்த சன்மானம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே முதல் முறையாக ரயில்வே துறை ஊழியர்களுக்கு அவர்களின் உற்பத்திக்கு ஏற்ப போனஸ் வழங்கும் முறை கடந்த 1979-80ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்பின்பு ஒவ்வொரு முறையும் உற்பத்திக்கு ஏற்ப போனஸ் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017-18ஆம் ஆண்டு 78 நாட்கள் ஊதியம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.