மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 88-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, ஆனால் தொலைநோக்குத் திட்டம் இல்லாததால் எதிர்ப்பு எழுந்தது.
சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில், இன்று தாக்கல் செய்திருக்கிறார். இது, நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும். அதன்படி இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து, பட்ஜெட் மீது 1 மணி நேரம் 25 நிமிடங்களுக்கு உரையாற்றினார். கடந்த, ஆண்டு பட்ஜெட் உரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் இருந்த நிலையில், இன்று 10 நிமிடங்களுக்கு கூடுதலாக உரையாற்றிருக்கிறார்.
மேலும், இந்த பட்ஜெட்டில், ஷி திட்டம், நாடெங்கும் தனியார் துறையுடன் இணைந்து 5 மருத்துவ மையங்கள் அமைப்பது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாசார செழுமையயை விளக்கும் வகையில் மையம் உருவாக்கப்படும். தமிழகம், கேரளா, ஒடிசாவில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம் அமைக்கப்படும். பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும். பொதிகை மலை, இமாச்சல், ஜம்மு காஷ்மீரில் ட்ரக்கிங் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற அறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் தான், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எவ்வித தொலைநோக்குத் திட்டமும் இடம்பெறவில்லை என கூச்சல் எழுப்பிய நிலையில், பட்ஜெட் உரைக்குப் பிறகு நாடாளுமன்றம் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.