இந்தியா

மீண்டும் நடைதிறப்பு; நீட்டிக்கப்பட்ட 144 தடை - சபரிமலை நிலவரம்

webteam

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்ட கோயில் நடை கடந்த 27-ம் தேதி அடைக்கப்பட்டது. இந்நிலையில் மகரபூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டது. வரும் ஜனவரி 14-ம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மகரவிளக்கு பூஜை காலம் முடிந்ததும், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை மறு சீராய்வு கோரும் மனுக்களை வரும் ஜனவரி 22-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

முன்னதாக அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அத்துடன் அங்கு வந்த பெண்களை மலை மீது ஏறவிடாமல் அவர் போராடினர். இதனால் சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு டிசம்பர் 29ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவு முடிவடைந்த நிலையில், மீண்டும் நேற்று சபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டதால் 144 தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

மகரவிளக்கும் பூஜையின் போது ஏராளமான பக்தர்கள் அங்கு கூடுவார்கள் என்பதால், போராட்டம் ஏற்பட்டால் கட்டுப்படுத்த முடியாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின் படி ஜனவரி 5ஆம் தேதி வரை 144 தடை அமலில் இருக்கும். அதன் பின்னர் தேவை ஏற்பட்டால் மகரவிளக்கு பூஜை முடியும் வரை கூட 144 தடை நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.