இந்தியா

"ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநர் அனுமதி தந்தே ஆக வேண்டும்" - துரைமுருகன்

PT WEB

ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததாக கருத முடியாது, இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் தனியார் ஓட்டலில் நடந்தது. இதில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், உள்ளிடோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசியபோது "ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை குற்றத்தின் அடிப்படையில் நடந்ததாக யாரும் கருதவில்லை, நீண்ட நாள் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அதற்கு பிறகு அவருக்கு தரப்பட்டுள்ள அவகாசத்தின் அடிப்படையில் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் ராகுல் காந்தி உச்சநீதிமன்றம் செல்லும் வாய்ப்பிருந்தது."

ஆனால், ராகுல் அதை பயன்படுத்தும் முன்பே அவசர அவசரமாக இப்படிப்பட்ட தண்டனையை வழங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு உகந்த முறையல்ல. மாபெரும் நாட்டை பெரிய மெஜாரிட்டியுடன் ஆளும் ஒரு கட்சி தனி மனிதனை கண்டு அஞ்சுகிறதோ என்ற அச்சம் அரசியல் நோக்கர்களுக்கு ஏற்படுகிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள தலைவர்கள் இதனை கண்டித்து இருக்கிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆளுநர், தடை விதித்து அனுமதி தந்தே ஆக வேண்டும், அதனை பெட்டிற்கு (படுக்கைக்கு) அடியிலேயே வைத்திருக்க முடியாது என கூறினார்.