வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை மனிதம் பயன்படுத்தும் விதம் சில சமயங்களில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக மாறி விடுகிறது. இந்த செய்தியில் நீங்கள் பட்டிக்க போகும் விஷயமும் அப்படியானதுதான். வெளிநாட்டில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வீடியோ கால் மூலமே திருமண நிச்சயதார்தத்தை நடத்தி முடித்துள்ளனர் வட மாநிலத்தைச் சேர்ந்த இந்தியர்கள்.
வட மாநிலக் குடும்பம் ஒன்று தங்களது வாரிசுகளுக்கு வரன் தேடி வந்துள்ளனர். கைமேல் பலனாக நல்ல வரன் அமைந்துள்ளது. ஆனால் ஒரு சிக்கல் இதில் ஆணும் பெண்ணும் வேறு வேறு நாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளனர். நிச்சயதார்த்த நாளும் நேரமும் குறித்தும், அவர்களால் நேரடியாக நிச்சயதார்த்த நிகழ்விற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மாற்று யோசனையாக நிச்சயதார்த்த நாளில் ஒரு செல்போன் வீடியோ காலில் ஆண் இருக்க, மற்றொரு செல்போன் வீடியோ காலில் பெண் இருக்க. அவர்களுக்குள் முறைப்படி நிச்சயதார்த்த சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன. ஆணின் செல்போன் ஒரு மனையிலும், பெண்ணின் செல்போன் இன்னொரு மனையிலும் என தனித்தனியாக வைக்கப்பட்டன. அருகே நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தேவையான பூஜைப் பொருள்கள் தேங்காய், பூ, குங்குமம், பட்டுப்புடவை வைக்கப்பட்டன.
இந்த விநோத நிச்சயதார்தத்துக்கு ஆண் பெண் வீட்டு உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். சிலர், இந்த ஆன்லைன் நிச்சயத்தை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். எல்லா நிச்சயதார்த்த வைபவம் போல, இதற்கும் வேத மந்திரங்கள் ஒலிக்கப்பட்டன. புரோகிதர் வேத மந்திரங்களை கூறினார். சடங்கும் சம்பிரதாயமும் முறைப்படி நடந்து முடிந்து இறுதியாக ஆண் வீட்டார், பெண்ணின் நிச்சயதார்த்த சேலையை செல்போன் மீதும், குங்குமத்தை செல்போன் ஸ்கீரினிலும் வைத்தனர். இத்துடன் ஆன்லைன் நிச்சயதார்த்த நிகழ்வு புதுவிதமாக இனிதே முடிந்தது. இந்த ஆன்லைன் நிச்சயதார்த்த காட்சிகள் இப்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.