இந்தியா

தரமற்ற சாலை பணிக்காக என்ஜினியரை தோப்புகரணம் போடவைத்த எம்.எல்.ஏ - வீடியோ

webteam

தரமற்ற சாலை பணிக்காக என்ஜினியரை எம்.எல்.ஏ ஒருவர் தோப்புக்கரணம் போடவைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஒடிசாவில் பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள பாட்னாகர் நகரிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ சரோஜ் குமார் மேகர். இவர் தனது ஆய்வு செய்வதற்காக நேற்று தனது பாட்னாகர் தொகுதிக்கு சென்றார். அப்போது அரசு அதிகாரிகளும் உடன் சென்றனர். 

இதையடுத்து அப்பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலை சில நாட்களிலேயே மிகுந்த சேதமடைந்ததாகவும் இதற்கு காரணம் அதிகாரிகள் தரமற்ற வேலை செய்ததே எனவும் அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏவிடம் புகார் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ சரோஜ் குமார் மேகர் அருகில் இருந்த ஜூனியர் பொறியாளரை தரமற்ற வேலை செய்ததற்காக தோப்புகரணம் போடுமாறு உத்தரவிட்டார். எம்.எல்.ஏவின் உத்தரவிட்டதற்காக அந்த பொறியாளரும் மக்கள் முன்பு சில தோப்புகரணத்தை போட்டார். இதை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து எம்.எல்.ஏ சரோஜ் குமார் மேகர் கூறுகையில், “நாங்கள் கட்டுமான தளத்திற்கு சென்று சாலையின் தரத்தை பரிசோதித்தபோது, அது திருப்தியற்றதாக இருந்தது. என்ஜினியருக்கு எதிராக உள்ளூர் மக்கள் கோபமடைந்து அவரை தாக்க முற்பட்டனர். மேலும் என்ஜினியருக்கு தண்டனை கொடுக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அந்த இடத்தில் நான் என்ன செய்ய முடியும். இவ்வாறு உத்தவிட்டது எனக்கு வருத்ததை ஏற்படுத்தியது.” எனத் தெரிவித்தார்.