இந்தியா

'ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகுதான்' -ராம்தேவின் கருத்துக்கு மஹுவா மொய்த்ரா கண்டனம்

JustinDurai

'ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகாக தெரிகிறார்கள்' என்ற ராம்தேவ் பாபாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் நடந்த விழா ஒன்றில் யோகா குரு ராம்தேவ் பாபா கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய ராம்தேவ் பாபா, 'பெண்கள் சேலையில் அழகாக இருக்கிறார்கள். சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள். ஆனால் என் பார்வையில், அவர்கள் ஒன்றும் அணியாவிட்டாலும் அழகாகத் தெரிகிறார்கள்' என்று கூறினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராம்தேவின் கருத்துக்கு மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் ராம்தேவ் பாபாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ''ராம்லீலா மைதானத்தில் இருந்து பதஞ்சலி பாபா ஏன் பெண்களின் உடையில் ஓடினார் என்பது இப்போது எனக்குத் தெரியும்'' என்று ட்வீட் செய்தார். மேலும் ராம்தேவ் பாபாவின் பெண்கள் பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்து குறித்து 3 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ரூபாலி சகாங்கர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.