இந்தியா

உ.பி: பாலியல் துன்புறுத்தல் செய்து 17 வயது சிறுமியை மாடியிலிருந்து தூக்கி வீசிய இளைஞர்கள்

JustinDurai
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமியை 3 இளைஞர்கள் மாடியிலிருந்து தூக்கி வீசிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா நகரத்தில் இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சியில், 3 இளைஞர்கள் சிறுமி தங்கியிருக்கும் குடியிருப்புக்குள் நுழைகின்றனர். பின்னர் 17 வயது சிறுமி ஒருவர், மாடியிலிருந்து சாலையில் தொப்பென்று விழுவதை காட்டுகிறது.
இந்நிலையில், படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சுயநினைவுடன் இருப்பதாகவும், அவரின் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்த சிறுமியின் தந்தை 3 இளைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ''தங்கள் வீட்டிற்கு அருகே வசித்து வரும் 3 இளைஞர்கள் கடந்த சில மாதங்களாக எனது மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வந்தனர். திங்கட்கிழமை இரவு ஒருவர் எனக்கு போன் செய்து மகளிடம் பேச வேண்டும் என கூறினார். நான் மறுத்துவிட்டேன், அதற்கு அந்த இளைஞர் என்னை தகாத வார்த்தையில் திட்டினார். இரவு 8 மணிக்கு 3 இளைஞர்களும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தினர், பின் தூக்கிச் செல்ல முயன்றனர். குடும்பத்தினர் கூச்சலிட தொடங்கியதால் குற்றவாளிகள் எனது மகளை 2-வது மாடியிலிருந்து தூக்கி வீசிவிட்டு தப்பியோடி விட்டனர்'' என பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.