இந்தியா

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பேசும்போது திடீரென மைக்கை பிடுங்கிய மர்ம நபர் - வைரல் வீடியோ!

ச. முத்துகிருஷ்ணன்

தெலுங்கானா மாநிலத்தில் விழா ஒன்றில் பாஜகவைச் சேர்ந்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசும்போது திடீரென மேடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அவரது மைக்கை பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தில் பாக்யநகர் கணேஷ் உத்சவ் சமிதியின் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் பங்கேற்பதற்காக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஹைதராபாத் வந்துள்ளார். விழாவின் ஒரு பகுதியாக மேடையில் ஏறி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் ஹிமந்தா சர்மா சொற்பொழிவாற்றி கொண்டிருந்தார்.

அப்போது மேடையில் இருந்த கூட்டத்தில் புகுந்த மர்ம நபர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசிக் கொண்டிந்த மைக்கை தன்பக்கம் இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹிமந்தா சர்மா மைக்கை அந்த நபரிடமிருந்து பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மேடையில் இருந்த மற்றவர்களும் இந்த சண்டையை தீர்க்க முயல, அத்துமீறி நுழைந்த நபரை சூழ்ந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இறுதியாக அந்த நபர் மேடையில் இருந்து இறக்கப்பட்டார். முன்னதாக ஹிமந்தா சர்மா, “தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ் கட்சியினர் குடும்ப அரசியலில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். நாடு இந்த குடும்ப அரசியலில் இருந்து விடுபட வேண்டும்” என்று பேட்டி அளித்திருந்தார். மேலும் சர்மாவின் பேச்சை பாதியில் நிறுத்த முயன்ற அந்த நபரும் டி.ஆர்.எஸ். கொடியை அணிந்திருந்ததாக பாஜக தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.