மூதாட்டியின் உடல் கிடந்த இடத்தில் விசாரணை நடத்திய போலீசார்
மூதாட்டியின் உடல் கிடந்த இடத்தில் விசாரணை நடத்திய போலீசார் PT WEB
இந்தியா

பெங்களூர் | குப்பைத்தொட்டியில் கிடந்த மூதாட்டியின் உடல் பாகங்கள்... மர்மநபர்களை தேடும் காவல்துறை!

விமல் ராஜ்

பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் அருகே உள்ள நிசர்கா லெ அவுட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியொன்று உள்ளது. இந்த குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தின் பக்கத்தில் இருக்கும் காலி நிலத்தில் அந்த பகுதி மக்கள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் அந்த பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் ட்ரம்மில் கடந்த இரண்டு நாட்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து சந்தேகத்தில் அந்த பிளாஸ்டிக் டிரம்மை அந்த பகுதி மக்கள் திறந்து பார்த்துள்ளனர். அதில், மனித சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் உடனடியாக, கிருஷ்ணராயபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் ட்ரம்மில் இருந்த சடலம் சுமார் 65 முதல் 70 வயதுடைய மூதாட்டியின் உடல் என்பதும், ஆறு துண்டுகளாக வெட்டி ட்ரம்மில் போட்டுச் சென்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரதாபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நிசர்கா அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் வாடகைக்கு வசித்து வந்த மூதாட்டி ஒருவரை காணவில்லை எனத் தெரியவந்தது.

பின்னர் அங்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், மூதாட்டியின் பெயர் சுசீலாம்மா (70) எனத் தெரியவந்தது. இவர் தனது மகளுடன் வசித்து வந்ததும், அம்மகள் தற்போது திருமணமாகி வேறு இடத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மோப்பநாய்யை வரவழைத்துத் தேடியுள்ளனர். மோப்பநாய், சடலம் கிடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்றுள்ளது. அந்த வீட்டில் ரத்தக் கரைகளும் இருந்துள்ளது.

இதையடுத்து அங்கிருந்த நபரை போலீசார் பிடித்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர்தான் கொலை செய்தாரா? அல்லது கொலையாளிக்கு உதவி செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.