இந்தியா

தேவாலயத்தில் முதியவர் குத்திக் கொலை : ஆவடி அருகே பரபரப்பு

webteam

ஆவடி அருகே தேவாலயத்தில் ஊழியர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஈனேஷ் (62). மத்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர் பட்டாபிராம் வள்ளலார் நகரில் உள்ள தேவாலயத்தில் ஊழியம் செய்து வருகிறார். இந்நிலையில் தேவாலயத்தில் இரவு லைட் போட சென்ற ஈனேஷ், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் தேவாலயம் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஈனேஷ் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதனையடுத்து உடனடியாக அருகே உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். அதனை த்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தேவாலயத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் அதே தேவாலயத்திற்கு வரும் மோசஸ் (29) என்பவர், ஈனேஷை கத்தியால் மூன்றுமுறை நெஞ்சில் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து தப்பியோடிய மோசஸை தாம்பரம் அருகில் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மோசஸ் மீது ஏற்கெனவே சத்தியவேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கும், பட்டாபிராம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.