உத்தரபிரதேசத்தில் முதியவர் ஒருவர் சகதியில் மாட்டிக்கொண்டு உயிர்பிழைக்க போராடும் வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாக பரவிவருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மக்கள் குடிநீருக்காக போராடி வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடியோவில் ஆற்றுப்பகுதிக்கு அருகே முதியவர் ஒருவர் இடுப்பளவு சகதியில் மாட்டியுள்ளார். அமிழும் அவருக்கு மற்றொரு நபர் நீண்ட தடிமனான மரக்குச்சியை நீட்டி அதை பிடித்து மேலே வருமாறு கூறுகிறார். அந்த முதியவரின் அருகே சில்வர் பாத்திரம் ஒன்றும் இருக்கிறது. அதை வைத்து பார்க்கும்போது அந்த முதியவர் குடிநீருக்காக தனது உயிரை பணயம் வைத்திருப்பார் என்று சொல்லப்படுகிறது.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் பலரும் உத்தர பிரதேச அரசு குறித்து பல்வேறு விமர்சனங்களை மக்கள் முன்வைத்து வருகின்றனர். உ.பியில் குடி தண்ணீருக்காக அவ்வபோது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால், குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க வீடுகளுக்கு குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்ற அரசின் வாக்குறுதியை நெட்டிசன்கள் மேற்கோளிட்டு காட்டி வருகின்றனர்.
வைரலான அந்த வீடியோ ஹமிர்புர் கிராமத்திலுள்ள பாச்ச கஹானி கிராமத்தில் நடந்தது என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா என்றும் பல்வேறு கேள்விகளை நெட்டிசன்களும் பொதுமக்களும் எழுப்பிவருகின்றனர்.