model image
model image freepik
இந்தியா

இறந்ததாகக் கருதி இறுதிச்சடங்கு.. மயானத்தில் உயிருடன் எழுந்த ஒடிசா பெண்.. பயத்தில் அலறி ஓடிய மக்கள்!

Prakash J

ஒடிசா மாநிலம் கஞ்சமின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் நகரின் கூட்ஸ் ஷெட் சாலையைச் சேர்ந்தவர் சிபாராம் பாலோ (54). இவரது மனைவி புஜ்ஜி அம்மா (52). இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி வீட்டில் நடந்த சிறிய தீ விபத்தில் சிக்கிய புஜ்ஜி அம்மாவுக்கு 50 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். போதிய பணம் இல்லாததால் சிகிச்சையின் இடையிலேயே அவர் வீட்டுக்குத் திரும்பினார். இருந்தாலும் வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி காலை புஜ்ஜி அம்மா கண் விழிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கணவர் சிபாராமும், உறவினர்களும் புஜ்ஜி அம்மா இறந்துவிட்டதாகக் கருதினர். இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தீவைக்க முயன்ற நேரத்தில் புஜ்ஜி அம்மா கண் திறந்து பார்த்தார். இதையடுத்து அவர் உயிருடன் இருப்பதைப் பார்த்த உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த சம்பவம் பெர்ஹாம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

model image

இதுகுறித்து புஜ்ஜி அம்மாள் கணவர், ”அவர் கடந்த 12ஆம் தேதி காலை கண்களைத் திறக்கவில்லை மற்றும் சுவாசிக்கவில்லை. இதனால் அவர் இறந்திருக்கலாம் என்று நாங்கள் நினைத்து, அந்தப் பகுதியில் உள்ள மற்றவர்களிடம் தெரிவித்தோம். இதுகுறித்து மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவில்லை. அத்துடன் அவர் இறந்து போனதற்கான சான்றிதழையும் நாங்கள் பெறவில்லை. இந்த நேரத்தில்தான் அவரை மயானத்திற்குக் கொண்டு சென்று இறுதிச்சடங்கில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அவர் கண்களைத் திறந்தது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தற்போது அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.