ஒடிசாவில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா அதிவேகமாக பரவிவருவதால் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் வருகிற மே 1-ம் தேதி முதல் நாட்டில் 18 வயது பூர்த்தியான ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் 18 முதல் 44 வயது வரையிலான ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவச அடிப்படையில் போடப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் நவீன் பட்னாயக் கூறுகையில், ''ஒவ்வொரு குடிமக்களின் உயிரும் எங்களுக்கு விலைமதிப்பற்றது. மாநிலத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசிக்காக பணம் செலுத்த வேண்டியதில்லை என்ற முடிவை மாநில அரசு எடுத்துள்ளது. தடுப்பூசிக்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். இந்த இலவச தடுப்பூசி இயக்கத்தின் கீழ், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட 2 கோடி மக்கள் பயனடைவார்கள். மாநில அரசு இந்த திட்டத்திற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடும்" என்று தெரிவித்துள்ளார்.