இந்தியா

ஒடிசாவில் கொடூரம்... வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெயை வீசிய உணவக உரிமையாளர்

JustinDurai

வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெயை வீசிய உணவக உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இருந்து வடகிழக்கே 45 கிமீ தொலைவில் உள்ள பாலிச்சந்திரபூர் கிராமத்தில் வசிப்பவர் பிரசன்ஜித் பரிதா (48). இவர் கடந்த சனிக்கிழமை அன்று உணவருந்துவதற்காக உள்ளூரில் இயங்கிவரும் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளார். சாப்பிட்ட பின் ஓட்டல் உரிமையாளர் பிரவாகர் சாஹூவிடம், சாப்பாட்டு சரியில்லை என்றும் விலைக்கேற்ற மாதிரி ருசியாக இல்லை என்றும் பிரசன்ஜித் பரிதா கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஓட்டல் உரிமையாளர் பிரவாகர் சாஹூ அங்கிருந்த கொதிக்கும் எண்ணையை   வாடிக்கையாளர் பிரசன்ஜித் பரிதா மீது ஊற்றி உள்ளார்.

இதில் முகம், கழுத்து, மார்பு, வயிறு மற்றும் கைகளில் பலத்த தீக்காயம் அடைந்த பரிதா வலியால் அலறித்துடித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் பிரசன்ஜித் பரிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்போது கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பாலிச்சந்திரபூர் போலீசார், தலைமறைவாகியுள்ள ஓட்டல் உரிமையாளர் பிரவாகர் சாஹூவை தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: கூட்டு பாலியல் வன்கொடுமை புகாரில் மெகா ட்விஸ்ட் -புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்ட பெண் கைது