இந்தியா

மாறி மாறி பாலியல் புகார்: குழம்பி நிற்கும் காவல்துறை

மாறி மாறி பாலியல் புகார்: குழம்பி நிற்கும் காவல்துறை

webteam

தன்னை மிரட்டி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

ரோமன் கத்தோலிக் டயோசிஸ் ஆப் ஜலந்தரின் பிஷப், பிராங்கோ முலக்கல். இந்த டயோசிஸுக்கு கேரள மாநிலம் கோட்டயம் அருகே குருவிலாங்காடில் கான்வென்ட் ஒன்று உள்ளது. இதைக் கன்னியாஸ்திரி ஒருவர் கவனித்து வந்தார். பிஷப் பிராங்கோ  அந்த கன்னியாஸ்திரியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுபற்றி கோட்டயம் மாவட்ட போலீஸில் புகார் அளித்துள்ளார் அந்த கன்னியாஸ்திரி. 

அவரது புகாரில், ‘முதன் முதலாக 2014-ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார் பிஷப் பிராங்கோ. தொடர்ந்து இதே போல மிரட்டி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்தார். இதையடுத்து சர்ச் நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் எடுக்கவில்லை. இதனால் போலீசில் புகார் கொடுக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 

இந்தப் புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பிஷப் முல்லாக்கலும் கன்னியாஸ்திரி மீது புகார் கொடுத்துள்ளார். ’இங்கிருந்து அவரை டிரான்ஸ்பர் செய்தோம். கன்னியாஸ்திரியும் அவர் உறவினர்களும் டிரான்ஸ்பர் செய்யக்கூடாது என்றார்கள். பின்னர் மிரட்டினார்கள். அதற்கு பழிவாங்குவதற்காக அடிப்படை ஆதாரம் இல்லாத இந்தப் புகாரை தெரிவித்துள்ளனர்’ என்று பிஷப் தெரிவித்துள் ளார்.

இதுபற்றி கோட்டயம் போலீஸ் அதிகாரி ஹரிசங்கர் கூறும்போது, ‘இருவரும் மாறி மாறி புகார் கொடுத்திருக்கிறார்கள். அது பற்றி விசாரிக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளோம்’ என்றார்.

கோட்டயத்தில் ஐந்து பாதிரியார்கள் சேர்ந்து பாவ மன்னிப்புக் கேட்க வந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள் அடுத்து வந்துள்ள இந்த பாலியல் வன்கொடுமை புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.