கேரளாவில் பாலியல் புகாருக்கு உள்ளான கிறிஸ்தவ பிஷப்பிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா, கத்தோலிக்க தேவாலய தலைவர்கள் மீது அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை ஜலந்தரில் கத்தோலிக்க பிஷப்பாக இருந்த ஃபிராங்கோ முல்லக்கல் பாலியல் வன்கொடுமை செய்தததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரளாவில் போராட்டங்கள் வெடித்தததை அடுத்து ஃபிராங்கோ கைது செய்யப்பட்டார். பிஷப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா, விதிகளுக்கு முரணாக கவிதை மற்றும் புத்தகங்கள் எழுதியதாக கத்தோலிக்க சபையில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் லூசி கலபுரா, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக பேசி வந்த கத்தோலிக்க தேவாலய தலைவர்கள், தற்போது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சித்துள்ளார். சபை சார்பில் தமக்கு மனதளவில் பல்வேறு கொடுமைகளை இழைக்கப்பட்டதால்தான் புத்தகம் எழுதத் தொடங்கியதாகவும், என்ன நடந்தாலும், வரும் 10 ஆம் தேதி அந்தப் புத்தகத்தை வெளியிடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அந்தப் புத்தகத்தில் கன்னியாஸ்திரிகளுக்கும், தேவாலய பாதிரியார்களுக்கும் இடையே இருக்கும் ரகசிய உறவுகள் மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்து எழுதியிருப்பதாக லூசி கலபுரா தெரிவித்துள்ளார்.