மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி தூக்கிய நிலையில், இன்று திடீரென பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் விலகினார். இதனையடுத்து ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பதவி விலகிய 20 பேரில் 6 பேர் ம.பி அமைச்சர்கள் ஆவார்கள்.
மத்திய பிரதேசத்தில் 20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால், சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 121-லிருந்து 101 ஆக குறைகிறது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்எல்ஏக்கள் பலம் தேவை.
மத்திய பிரதேச சட்டப்பேரவை மொத்த பலம்: 230 உறுப்பினர்கள் (இரு எம்.எல்.ஏ.க்கள் உயிரிழப்பு)
தற்போதைய பலம்: 228 உறுப்பினர்கள்
ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு 20 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவை பேரவை தலைவர் ஏற்றால்
உறுப்பினர்கள் பலம் 208
பெரும்பான்மை 105
காங்கிரஸ் கூட்டணி 101 (காங்.: 94+ பிஎஸ்பி: 2+ சமாஜ்வாதி: 1+ சுயேச்சை: 4)
பாஜக 107
பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களை பாஜக பெறுவதால், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியமைக்கும்.