இந்தியா

“ அரசு எங்களை ஓரங்கட்டுகிறது”- தேசிய புள்ளிவிவர ஆணையத் தலைவர் ராஜினாமா

“ அரசு எங்களை ஓரங்கட்டுகிறது”- தேசிய புள்ளிவிவர ஆணையத் தலைவர் ராஜினாமா

Rasus

தேசிய புள்ளிவிவர ஆணையத் தற்காலிகத் தலைவர் மற்றும் வெளிவிவகார உறுப்பினர் அரசு தங்களை ஓரங்கட்டுவதாக கூறி பணிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தேசிய புள்ளிவிவர ஆணையத் தற்காலிகத் தலைவர் பிசி மோகனன். வெளிவிவகார உறுப்பினர் ஜேவி மீனாட்சி. இவர்களின் பணிக்காலம் வரும் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ள நிலையில், அரசு தங்களை ஓரங்கட்டுவதாக கூறி பணிகளில் இருந்து விலகியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “ கடந்த 2017-18-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு கணக்கெடுப்பை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர். அதேமசயம் எங்களுடன் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் கடந்தாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய முடிவுகளில் எங்களை கண்டுகொள்வதில்லை. அரசாங்கத்தால் ஓரங்கட்டப்படுகிறோம். அதுமட்டுமில்லாமல் தேசிய புள்ளிவிர ஆணையத்தின் தற்போதைய முடிவுகள் எதுவும் செயல்படுத்தப்படுவதும் இல்லை” எனக் கூறியுள்ளனர். இதுமட்டுமில்லாமல் NSSO-வின் வீட்டுக் கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதும் இவர்கள் பதவி விலக காரணமாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்திய புள்ளியியல் கணக்கெடுப்பு தலைமையாளரான பிரவீன் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்து கூறும்போது, “ கடந்த சில மாதங்களில் நடைபெற்ற ஆணையக் கூட்டத்தில் அவர்கள் எந்தவித குறையையும் எழுப்பவில்லை. ஆணையம் எப்போதும் ஆணையக் குழுவின் அறிவுறுத்தல்களை கேட்டு அதற்கேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.