பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தேர்வு செய்தது ஒரு தனிப்பட்ட கட்சியின் விருப்பம் எனவும் கூட்டணிக் கட்சிகளின் விருப்பமில்லை எனவும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக தெரிவித்தார். மேலும் ராகுல் காந்தியே வருக, நல்லாட்சி தருக” எனவும் கூறினார்.
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்தக் கருத்து தேசிய அரசியல் தளத்தில் பலதரப்பட்ட விவாதங்களுக்கு வழிவகுத்தது.
ஸ்டாலினின் கருத்துக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மக்களவை தேர்தலுக்கு பின் தான் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய முடியும் எனவும் ஒருதலை பட்சமான தேர்வு தவறான எண்ண ஓட்டத்தை உருவாக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தேர்வு செய்தது ஒரு தனிப்பட்ட கட்சியின் விருப்பம் எனவும் கூட்டணிக் கட்சிகளின் விருப்பமில்லை எனவும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிகளை உருவாக்க முதலில் முயற்சி செய்தது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்தான் எனவும் பிரதமர் வேட்பாளராக ராகுலை தேர்வு செய்வது கூட்டணி கட்சிகளின் விருப்பமாகாது எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜக கவலைப்பட வேண்டாம் எனவும் பாஜகவை வீழ்த்த மக்கள் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.