இந்தியா

“எல்லை பிரச்னையில் சீனாவுடன் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை” - ராஜ்நாத் சிங்!

EllusamyKarthik

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள லடாக் எல்லை பிரச்னையில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். கடந்த ஜூன் மாதம் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே  ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த சுமார் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

சுமார் 76-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். கடந்த 1975 முதலே இந்த எல்லை பிரச்னை நிகழ்ந்து வந்தாலும் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதல் இருநாடுகளுக்கும் இடையே போர்ச் சூழலை உருவாக்கியது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

இந்நிலையில் ராணுவ உயர்மட்ட பேச்சுவராத்தியில் எந்தவித முன்னேற்றமும் எட்டப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார் ராஜ்நாத் சிங். 

“இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவது நிஜம் தான். அதன் மூலம் அவரவர் படை வீரர்களை பின் வாங்கி கொள்வதுதான் இந்த பேச்சுவார்த்தையை நடத்தக் காரணம். ஆனால் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இருநாட்டு ராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எந்நேரமும் நடைபெறலாம். இதுவரை எந்தவித ஆக்கப்பூர்வமான முடிவும் எட்டப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.