இந்தியா

விவசாயக் கடன் தள்ளுபடி கிடையாது - மத்திய அரசு

webteam

விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களவையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விவசாயிகள் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக சிவசேனா கட்சியின் உறுப்பினர் காவாலி படில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ருபாலா, “மத்திய அரசு தற்போது வரை விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக எந்த திட்டமிடவும் இல்லை. இத்தகைய கடன் தள்ளுபடி சலுகையில் ஒரு மாநிலத்தின் கலாச்சரத்தை பாதிக்கலாம். கடனை திருப்பிச் செலுத்தும் மனநிலையில் இருப்பவர்கள் கூட இதனால் மனமாற்றம் அடையக்கூடும்” என்று தெரிவித்தார். 

முன்னதாக நடந்து முடிந்த சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல்களில்,  பாஜக ஆட்சி செய்த மாநிலங்களான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று இடங்களையுமே காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பிரச்சாரத்தின் போது வாக்குறுதியளித்திருந்த ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 10 நாட்களுக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்ததே எனக் கூறப்படுகிறது. குறிப்பாக மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றிக்கு பெரிதும் உதவிய பிரச்சார வார்த்தைகளாக இது பார்க்கப்படுகிறது.