இந்தியா

பிராமணர்கள் பற்றி கருத்து - தந்தை மீதே வழக்குப்பதிவு செய்த சத்தீஸ்கர் முதல்வர்

Veeramani

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை நந்த் குமார் பாகேல் பிராமணர்களை புறக்கணிப்பது குறித்து கருத்து தெரிவித்ததற்காக ராய்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக 'சர்வ் பிராமண சமாஜ்' என்ற அமைப்பு அளித்த புகாரைத் தொடர்ந்து, டிடி நகர் போலீஸார் சனிக்கிழமை இரவு நந்த்குமார் பாகேல் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர். பிராமணர்களை வெளிநாட்டினர் என்று கூறி புறக்கணிக்குமாறு முதல்வரின் தந்தை சமீபத்தில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், மேலும் பிராமணர்களை கிராமங்களுக்குள் நுழைய விடாதீர்கள் என்றும் அவர் சொன்னதாக அந்த அமைப்பு தனது புகாரில் கூறியுள்ளது. நந்த்குமார் பாகேல் முன்பு ராமருக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். சமூக ஊடக தளங்களில் முதலமைச்சரின் தந்தை கூறிய கருத்துகளின் வீடியோ கிடைப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த பிரச்னைக்கு பதிலளித்த முதல்வர் பூபேஷ் பாகேல், "சட்டம் மிக உயர்ந்தது, நமது அரசாங்கம் அனைவரையும் ஆதரிக்கிறது. மாநிலத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட யாரும் இல்லை, அந்த நபர் எனது 86 வயது தந்தையாக இருந்தாலும். சத்தீஸ்கர் அரசாங்கம் ஒவ்வொரு மதத்தையும், சமூகத்தையும் மற்றும் அவர்களின் உணர்வுகளையும் மதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான எனது தந்தை நந்த் குமார் பாகேலின் கருத்து வகுப்புவாத அமைதியை சீர்குலைத்தது. அவருடைய அறிக்கையால் நானும் வருத்தப்படுகிறேன்"என்று முதல்வர் கூறினார்.