திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் கால்கள் கட்டியபடி களைப்புடன் படுத்துக் கிடக்கும் வீடியோ மற்றும் சோர்வுடன் சிகிச்சைபெறும் முதியவர் ஒருவரின் வீடியோ ஆகியவை வெளிவந்து பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இம்மருத்துவமனையில் ஒரு பெண் பதிவு பதிவு செய்துள்ள வீடியோவில் “ மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் கை,கால்கள் இரண்டும் படுக்கையில் கட்டப்பட்டுள்ளது. அவருக்கு நாள் முழுவதும் உணவு வழங்கப்படுவதே இல்லை. அவர் பசியில் துடித்தபடி சோர்ந்து படுத்துவிடுகிறார். அதுபோல அவருக்கு அடுத்த படுக்கையில் படுத்திருக்கும் வயதான நோயாளி ஒருவருக்கு மூக்கின் வழியாக மருந்துகள் செலுத்தப்படுகிறது. அவருக்கு ஒரு பாட்டில் முடிந்தால் அடுத்த பாட்டில் திரவத்தை யாரேனும் கேட்டால்தான் செலுத்துகிறார்கள், அவருக்கும் முறையான சிகிச்சை இல்லை” என்பன போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த வீடியோவை எடுத்த பெண், மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளுக்கு உணவும், மருந்தும் கொடுப்பதே இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்.
இதுபற்றி பதில் சொன்ன மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் மருத்துவர் சர்மத் “ இந்த வீடியோக்கள் முற்றிலும் தவறானவை. அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர், அதனால் அவர் திடீரென்று ஓடி பலரை காயப்படுத்திவிடுவார், இதனால்தான் அவரை மருத்துவர் வரும்போது மட்டும் கட்டி வைத்துள்ளனர். இந்த நேரத்தில்தான் அந்த பெண் வீடியோ எடுத்துள்ளார். அதுபோல அந்த முதியவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்கள் மருத்துவமனையில் அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிப்பட்டு வருகிறது. ஆகவேதான் இதுவரை இரண்டு நோயாளிகள் மட்டுமே மரணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்