bihar எக்ஸ் தளம்
இந்தியா

பீகார் | வினாத்தாள் கசிவு புகார்.. வெடித்த போராட்டம்.. அமைச்சர் சொன்ன உறுதியான பதில்!

”வினாத்தாள் கசிவுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை” என பீகார் மாநில அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Prakash J

பீகார் மாநிலத்தில் கடந்த 13ஆம் தேதி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட மையங்களில் ஏறக்குறைய ஐந்து லட்சம் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுதினர். இதில், பாட்னாவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில், வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறி நூற்றுக்கணக்கான தேர்வர்கள் தேர்வைப் புறக்கணித்தனர்.

இந்தத் தேர்வில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும், குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தேர்வு முறைகேட்டைக் கண்டித்து பாட்னாவில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், 10,000க்கும் மேற்பட்ட விண்ணப்பத்தாரர்களுக்கு மறு தேர்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.

பீகார்

ஆனாலும் இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு பிரபல தேர்தல் வியூகருமான, ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனமான பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்து இருந்தார். தேர்வு முறைகேட்டைக் கண்டித்து, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் திரண்டிருந்த மாணவர்கள், முதல்வர் நிதிஷ்குமார் இல்லம் நோக்கி பேரணியாகச் செல்லத் திட்டமிட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கிடையே அனுமதியின்றி கூடியதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்த பிரசாந்த் கிஷோருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் மாணவர்களிடம் பேச உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ”வினாத்தாள் கசிவுக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை” என அம்மாநில அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்த விவகாரத்தில் உயர் அதிகாரி ஒருவர் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் பொறுமையாக விசாரணை நடத்தினார். ஆனால், எனது தகவலின்படி, வினாத்தாள் கசிவுக்கான எந்த ஆதாரமும் இதுவரை அளிக்கப்படவில்லை. எனவே, தற்போதுவரை வினாத்​​தாள் கசிவு ஏற்படவில்லை என்று நாங்கள் உறுதியாக கூறுகிறோம். இதுவே ஆணையத்தின் நிலைப்பாடு. ஒரு தேர்வு மையத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதில், வெளிப்படையாக ஒரு சதி இருந்தது. வினாத்தாள் கசிவு பற்றிய வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அது எங்கு கசிந்தது, யாரிடம் கசிந்தது என்பது யாருக்கும் தெரியாது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் இளம் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடினர். அவர்கள் முகமூடியை அகற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

பீகார்

முன்னதாக, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு காங்கிரஸ் உள்ளிட கட்சிகள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்திருந்தன.