இந்தியா

இந்தியாவில் கொரோனா சமூகப் பரவல் இல்லை : ஐசிஎம்ஆர் திட்டவட்டம்

webteam

இந்தியாவில் கொரோனா சமூகப் பரவல் ஏற்படவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் இந்தியாவில் சமூகப் பரவல் ஏற்பட்டிருப்பதாகவும் பலரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாகச் சந்தேகம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் பலராம் பார்கவா தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும் போது, பெரிய நாடான இந்தியாவில் கொரோனா பரவல் என்பது குறைவாகவே உள்ளதாகக் கூறினார். அத்துடன் இந்தியாவில் சமூகப் பரவல் என்பது இல்லை என்றும் தெரிவித்தார். இந்தியாவில் பொது முடக்கம் வெற்றிகரமான முடிவுகளைத் தந்திருப்பதாகவும், அது விரைவான கொரோனா பரவலைத் தடுத்திருப்பதாகவும் கூறினார்.

இந்தியாவில் கொரோனா பரவல் 0.73% காணப்பட்ட 15 மாவட்டங்களைக் கண்டறிந்ததாகவும், பொது முடக்கத்தால் அப்பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.