விநாயகர் சதுர்த்தி நாளன்று தலைநகர் டெல்லியில் மக்கள் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதித்துள்ளது டெல்லி அரசு.
டெல்லியின் பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலினால் பெருமளவில் மக்கள் திரள்வதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று வழக்கமாக நடைபெறும் சமூக கொண்டாட்டங்களை தவிர்ப்பதை உறுதிப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது டெல்லி அரசு.
பந்தல் அமைப்பது, திரளான மக்கள் ஒன்றுகூடி விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைப்பதை தவிர்க்குமாறும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது டெல்லி அரசு.
மக்கள் அனைவரும் வீட்டிலேயே பத்திரமாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களிடம் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. பதட்டமான இடங்களில் பாதுகாப்புக்காக போலீசாரையும் அரசு பணியமர்த்த உள்ளது.