முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 5-ம் தேதி வரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன. இது தொடர்பான வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி மாதம் கைதானார். இவ்வழக்கில் ப.சிதம்பரமும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் தன்னை கைது செய்ய தடை கோரி ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ப.சிதம்பரத்தை வரும் 5-ம் தேதி வரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்வழக்கை மீண்டும் ஜூன் 5ம் தேதி விசாரிக்க இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது ப.சிதம்பரம் ஆஜராக உள்ளார்.