இந்தியா

அரசு அதிகாரிகள் ஹலோவிற்கு பதிலாக வந்தே மாதரம் என்று சொல்ல வேண்டும் - மகாராஷ்டிரா அமைச்சர்

webteam

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் செல்போனில் பேசும் போது இனி ஹலோ (Hello) என்பதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என அம்மாநில கலாச்சார அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலகங்களில் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் எனவும், அந்நிய வார்த்தையான ஹலோ-வை தவிர்த்து வந்தே மாதரம் என்ற உள்நாட்டு வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

“நாம் சுதந்திரத்தின் 76வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். நாம் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடுகிறோம். எனவே, அதிகாரிகள் அந்நிய வார்த்தையான ஹலோ என்பதற்குப் பதிலாக தொலைபேசியில் 'வந்தே மாதரம்' என்று சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது தொடர்பான முறையான அரசு உத்தரவு ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளும் தொலைபேசியில் பேசும்போது 'வந்தே மாதரம்' என்று சொல்ல வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.