இந்தியா

“கடவுளின் தேசத்திற்கு பின்னால் நாடே நிற்கனும்” - நிவின் பாலி உருக்கம்

webteam

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்து அம்மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத கடுமையான பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி மக்கள் வாழும் பகுதிகளில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. 300க்கும் மேற்பட்ட மக்கள் தங்களை உயிரை இழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். கேரள அரசு சார்பில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் உதவிகளை செய்து வருகிறது. 

இதனிடையே, பல்வேறு பிரபலங்களும் களத்தில் இறங்கி பல்வேறு உதவிகளை திரட்டி வருகின்றனர். பணம் மற்றும் நிவாரணப் பொருட்களை சேகரிப்பதில் அவர்கள் முழுவீச்சில் செயல்படுகின்றனர். இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்து இளம் நடிகர் நிவின் பாலி உருக்கமாக பேசியுள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய நிவின் பாலி, “குழந்தை பருவத்திலே, “ஒரே நாடு ஒரே கொள்கை” என்பதை நான் நம்பினேன். கேரளாவில் பிறந்ததை பெருமையாக கருதி வருகிறேன். கடவுள் தேசத்தில் நான் பிறந்துள்ளேன் என்பதை எல்லோரும் சொல்ல கேட்டுள்ளேன். 

ஆனால், கடவுள் சொந்த தேசம் தற்போது சிதறுண்டு கிடக்கிறது. நாங்கள் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கிறோம். முன்னெப்போதும் இல்லாத அளவில் இயற்கையின் உக்கிரம் அதிகமாக உள்ளது. நிறைய பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கானோருக்கு எதிர்காலம் இருண்டுள்ளது. இந்தப் பேரழிவு சூழ்நிலையில் எங்களுக்கு உள்ள ஒரே வெளிச்சம், நாட்டிலுள்ள சக மனிதர்களின் அன்பு. 

என் இரு கரங்களை கூப்பி உலகம் முழுவதும் உள்ள சகோதரர்களை உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் அளவிற்கு மன உறுதியும், தைரியமும் எங்களிடம் உள்ளது என்பதை ஒட்டுமொத்த கேரளா சார்பில் நான் கூறுகிறேன். எங்களது உடனடியாக தேவைப்படுது எல்லாம் நிவாரணப் பொருட்கள்தான். என்ன உதவி செய்கிறோம் என்பதல்ல; இங்கு விஷயம். அது எவ்வளவு விரைவில் வந்து சேர்கிறது என்பதுதான் முக்கியம். “ஒரு நாடு.. ஒரு கோட்பாடு” என்பது வெறு கோட்பாடு மட்டுமல்ல; யதார்த்தத்திலும் அது பிரதிபலிக்க வேண்டும். கடவுளின் தேசமான கேரளாவின் பின்னால் நாட்டு மக்களும் நிற்பார்கள் என்று என் கன்னங்கள் முழுக்க கண்ணீர் வழிய எதிர்பார்க்கிறேன். நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கிறது. அதனை கேரளா நிரூபித்து காட்டும்” என்று கூறியுள்ளார்.