இந்தியா

அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என ஐஜத எம்எல்ஏ பகிரங்க புகார்.. சிக்கலில் நிதிஷ் குமார்!

webteam

பீகார் மாநிலத்தில் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டுள்ளார் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி. இதனால் அம்மாநில அரசியலில் மீண்டும் குழப்பம் நிலவுகிறது.

பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி உடனான முரண்பாட்டை தொடர்ந்து கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கமும் செய்யப்பட்டது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி, ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், தன்னைப் போன்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி கூறிய கருத்து தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் அவையில் இடம் வழங்க முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி பேசியிருக்கக் கூடாது என தெரிவித்துள்ள நிதிஷ்குமார், இத்தகைய தவறான செயல்பாடுகள் குறித்து பேசி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பீமா பாரதியை போலவே இன்னும் சில சட்டம்னற உறுப்பினர்களும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

- நிரஞ்சன் குமார்