இந்தியா

5 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் பெட்ரோல் பயன்படுத்தப்படாது; தடை விதிப்போம் - நிதின் கட்கரி

ச. முத்துகிருஷ்ணன்

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் பெட்ரோல் பயன்படுத்தப்படாது என்றும், அதன்பிறகு இந்தியாவில் பெட்ரோல் உள்ளிட்ட புதைபடிவ எரிபொருளுக்கு தடை விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு டாக்டர் ஆஃப் சயின்ஸ் (டிஎஸ்சி) என்ற கவுரவப் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் “அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் பெட்ரோல் பயன்பாட்டுக்கு வராது. ஒரு அறிக்கையின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல்களும் தீர்ந்துவிடும். அதன் பிறகு நாட்டில் படிம எரிபொருளுக்கு தடை விதிக்கப்படும்.பெட்ரோலுக்கு மாற்றாக நாடு விரைவில் பசுமை எரிபொருளுக்கு மாறும். இதில் உயிரி எரிபொருளும் அடங்கும்.

மகாராஷ்டிராவின் விதர்பா மாவட்டத்தில் விவசாயிகளால் தயாரிக்கப்படும் பயோ-எத்தனாலை உதாரணமாக கொள்ளலாம். இந்த விவசாயிகள் உணவு வழங்குநர்கள் மட்டுமல்ல, ஆற்றல் வழங்குநர்களாகவும் பங்களிக்க முடியும். மேலும் உயிரி ஹைட்ரஜனை மாற்று எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். ஆழ்துளை கிணற்றில் இருந்து உயிரி எரிபொருள் தயாரித்து ரூ.5க்கு விற்கலாம்” என்று தெரிவித்தார். கட்கரி மின்சாரம் மற்றும் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்குவதற்கு வெளிப்படையான ஆதரவாளராக இருந்து வருகிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் மூலம் இயங்கும் கார்களுக்கு இணையாக இருக்கும் என்று சமீபத்தில் அவர் கூறினார்.