நிர்மலா சீதாராமன் எக்ஸ் தளம்
இந்தியா

மத்திய பட்ஜெட்| "எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை" - நிர்மலா சீதாராமன்

”எந்த மாநிலத்தின் பங்கும் குறைக்கப்படவில்லை” என்று மத்திய பட்ஜெட் விமர்சனங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

PT WEB

வரிப் பகிர்வை மத்திய அரசு நீர்த்துப்போகச் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிராகரித்துள்ளர். மேலும், பிரிக்கக்கூடிய நிதியில் 41% மாநிலங்களுக்கு மத்திய அரசு மாற்றியுள்ளதாகவும், எந்த மாநிலத்தின் பங்கும் குறைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு 2018 முதல் 2023 வரை எவ்விதக் குறைபாடுமின்றி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக, மாநிலங்களுக்கான மானியங்களையும் உள்ளடக்கி 17 லட்சம் கோடி ரூபாய் மூலதனச் செலவினமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இது ஜிடிபியில் 4.4 சதவீதம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிதி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள்கட்டமைப்பு பணிகளுக்கே செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்போது அவற்றுக்கான சலுகைகள் தொடர்வதை உறுதி செய்துள்ளதாகவும், பயோ-ஃபார்மா, மெகா ஜவுளிப் பூங்காக்கள், ஏழை மாணவர்களுக்கான ஏஐ கல்வி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு இந்த பட்ஜெட் அதிகமுக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன்

முன்னதாக ’தமிழ்நாடு இந்தியாவுக்குள் இல்லையா’ என்ற கேள்வியை மத்திய பட்ஜெட் எழுப்புவதாக, விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருந்தார். மக்களவையில் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என கூறினார். தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதி ரூ.3000 கோடி மறுக்கப்பட்டுள்ளது எனவும், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.