ஜப்பானில் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெற உள்ள ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.
ஜப்பானின் FUKUOKA நகரில் வரும் 8ஆம் தேதி முதல் 2 நாட்களுக்கு ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில், ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் பங்கேற்க உள்ளனர். அதன்படி, கடந்த வாரம் மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நிர்மலா சீதாராமன் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, ஜி20 நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா, பிரேசில், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
அப்போது, சர்வதேச பொருளாதாரத்தில் உள்ள சவால்கள், உட்கட்டமைப்புகளில் முதலீடுகளை அதிகரிப்பது, சர்வதேச வரிவிதிப்பு குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.