நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. அவரது கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், குற்றவாளிகள் நால்வரும் வருகிற ஒன்றாம் தேதி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிடும்.
நிர்பயா பாலியல் வழக்கில் நான்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகியோருக்கு வருகிற ஒன்றாம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு எதிராக குற்றவாளிகள் ஒவ்வொருவராக சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
அதில் முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் கடந்த 17-ஆம் தேதி நிராகரித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று முகேஷ் குமார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. தூக்குத் தண்டனைக்காக காத்திருப்பவரின் வழக்கை விட வேறு எதுவும் அவசரமானதாக இருக்க முடியாது எனக் கூறி அதை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அம்மனு மீது நீதிபதிகள் அமர்வு இன்று முடிவெடுக்க உள்ளது. இதனிடையே, குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக டெல்லி திகார் சிறையில் மூன்றாவது முறையாக முன்னோட்டம் பார்க்கப்பட்டது.