பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி புகாரில் சிக்கியுள்ள நகை வியாபாரி நிரவ் மோடி, சிபிஐயிடம் சிக்குவதற்கு முன்பே ஜப்பானில் இருந்த தனது தொழிலை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.12,800 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ புகார் தெரிவித்துள்ளது. இது குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை சிபிஐ முடக்கி உள்ளது. நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு ரொக்கப்பணம், டெபாசிட்கள், சொகுசு கார், இறக்குமதி செய்யப்பட்ட கைக்கடிகாரங்கள், வீடுகள், நிலம் என பலதரப்பட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டன. மேலும், அவரது நிறுவனத்தின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நிரவ் மோடி கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடு சென்று விட்டார். அவருடன் அவரது குடும்பத்தினரும் சென்று விட்டனர்.
பிஎன்பி வங்கி மோசடியில் முக்கிய புள்ளியாக உள்ள நிரவ் மோடி அமெரிக்காவில் உள்ளார் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது. ஆனால் அவர் அமெரிக்காவில்தான் உள்ளார் என்பதை உறுதிசெய்ய முடியவில்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, நிரவ் மோடி ஹாங்காங்கில் இருக்கலாம் என அமலாக்கப்பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பணமோசடி சட்ட தடுப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இந்தத் தகவலை தெரிவித்து இருந்தது.
ஆனால், இந்திய புலனாய்வு அதிகாரிகள் நெருங்குவதற்கு முன்பே ஹாங்காங்கில் இருந்து தனது தொழிலை முற்றிலும் அங்கிருந்து மாற்றிவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நிரவ் மோடியின் பையர் ஸ்டார் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஹாங்காங்கில் ‘Non Hong Kong’ நிறுவனமாக பதிவு செய்து இருந்தார். கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிரவ் மோடி மீதான புகாரை சிபிஐ உறுதி செய்த நிலையில், அவர் டிசம்பர் 12 ஆம் தேதியை ஹாங்காங்கில் இருந்து தொழிலை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார்.