ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன. மேலும், இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. மேலும் இருநாடுகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, இதுதொடர்பான விசாரணையை தொடங்கியுள்ள என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) பயங்கரவாதிகள் குறித்து தகவல்களைச் சேகரித்து வருகிறது.
அதன்படி, வெளிநாட்டு போராளிகளுக்கு ஆதரவளித்ததாக நம்பப்படும் சுமார் 20 OGW-களை (தரைவழிப் பணியாளர்) அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். உளவுத்துறை வட்டாரங்களின்படி, பயங்கரவாதிகளுக்கு உளவு மற்றும் தளவாட ஆதரவுடன் உதவுவதில் குறைந்தது நான்கு OGWக்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். தாக்குதல் தொடர்பாக NIA மற்றும் புலனாய்வு அமைப்புகள் இதுவரை 2,500க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, 186 பேர் மேலதிக விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் மூலம் இந்த சதித் திட்டத்தை ஐ.எஸ்.ஐ. நடத்தியதாக தேசிய புலனாய்வு முகமை தனது முதல்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவுடன் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு இருக்கும் தொடர்பை சுட்டிக்காட்டி என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. என்.ஐ.ஏ. விசாரணையில் இந்த தாக்குதலில் 5 முதல் 7 பயங்கரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், இவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 உள்ளூர் பயங்கரவாதிகள் உதவி இருக்கலாம் என்பது கண்டறியப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளான ஹாஷ்மி மூசா என்கிற சுலைமான், அலி பாய் என்கிற தல்ஹா பாய் ஆகியோர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.