பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு முகநூல்
இந்தியா

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு - மூளையாக செயல்பட்ட இருவர் அதிரடியாக கைது!

ஜெனிட்டா ரோஸ்லின்

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த மார்ச் 1ம் தேதியன்று பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடித்தது. அதில் பலர் படுகாயமுற்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு

குற்றவாளிகளின் மையப்படத்தை கொண்டு அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி இருந்தனர். மேலும் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவராக சந்தேகிக்கப்படும் இருவரை பற்றிய விவரங்களை NIA தெரிவித்திருந்தது.

இந்நிலையில் முஷாமி ஷரீப் என்பவர் டெல்லியில் மார்ச் 26 ஆம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் குண்டுவெடிப்பு திட்டத்திற்கு துணையாக செயல்பட்டுள்ளார் என சொல்லப்பட்டது. மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்திருந்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இரண்டு குற்றவாளிகளான முசாவீர் சாஹிப் ஹுசைன் (30) மற்றும் அப்துல் மதீன் தாஹா (30) ஆகியோரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். இவர்களை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு - மேலும் இருவர் கைது

இந்நிலையில் தலைமறைவாக இருந்த அந்த குற்றவாளிகள் கொல்கத்தாவில் வைத்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட முசாவிர் ஹூசைன்தான் ஹோட்டலில் குண்டு வைத்ததாகவும், அப்துல் மதீன் என்பவர்தான் குண்டு வைப்பதற்கு மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இவர்கள் 2020ம் ஆண்டு பயங்கரவாத வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.