இந்தியா

முதலிரவன்று புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்.. சோகத்தில் மூழ்கிய திருமண வீடு!

JananiGovindhan

காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஐ.டி. ஊழியர் ஒருவர் முதலிரவன்றே மூச்சு பேச்சின்றி கிடந்த சம்பவம் ஆந்திராவின் அண்ணமயா மாவட்டத்தில் நடந்திருக்கிறது. பகலா மண்டல் பகுதியில் உள்ள பதிபடிவரி பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் துளசி பிரசாத்.

ஐதராபாத்தில் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வந்த துளசி பிரசாத்தும், சிரிஷா என்ற மற்றொரு ஐ.டி. ஊழியரும் காதலித்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12ம் தேதிதான் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருமணமான மறுநாள் மண்டனபள்ளி பகுதியில் புதுமண தம்பதிக்கு முதலிரவு நடத்த பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதனையடுத்து முதலிரவு அறைக்குச் சென்ற மணப்பெண் சிரிஷா படுத்துக்கொண்டிருந்த துளசி பிரசாத்தை எழுப்ப முயற்சித்திருக்கிறார்.

ஆனால் வெகுநேரமாகியும் துளசி பிரசாத் கண் முழிக்காததால் பதறிப்போய் உறவினர்கள் அனைவரையும் அழைத்திருக்கிறார். அவர்கள் வந்து துளசி பிரசாத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு துளசி பிரசாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்கள்.

இதனைக் கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பின்னர் துளசி பிரசாத்தின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் அவரது சொந்த ஊருக்கு போயிருக்கிறார்கள். இதனிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த மண்டனபள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மறைந்த துளசி பிரசாத், திடீர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.