இந்திய கடலோர காவல்படை மற்றும் எல்&டி நிறுவனத்திற்கு இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ரோந்து கப்பல், இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விழா இந்திய கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குனர் மூர்த்தி தலைமையில் சென்னை காமராஜர் துறைமுகத்தில் நடைபெற்றது. 186.5 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல் பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு, ஏப்ரல் 2018-க்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கப்பலின் வேகம், திறன் ஆகியவை சோதிக்கப்பட்டு, ரோந்து பணிக்கு உகந்ததென்று கண்டறியப்பட்டால், பின்னர் இந்திய கடலோர காவல்படைக்கு அர்ப்பணிக்கப்படும். 98 மீட்டர் நீளம், 15மீ அகலம், 2,100 டன் எடை கொண்ட இந்த கப்பல் 25 கி.மீ முதல் 48 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. எல்லா ரோந்து கப்பல்களை போல், இதிலும் ரேடார் கருவிகள், தொலைதொடர்பு மற்றும் வழி காட்டி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.