இந்தியா

கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த சமூக வலைதளங்கள் மூலம் புதிய நடவடிக்கை

webteam

கருப்பு பணம் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த வருமானவரித்துறை திட்டமிட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின்மூலம் சமூக வலைதளங்களில் சேகரிக்கப்படும் தரவுகள் ஆய்வு செய்யப்படும். பின்னர் இந்தத் தகவல்கள் வருமானவரித்துறையில் தாக்கல் செய்யப்படும் வருமானவரி கணக்குடன் ஒப்பிடப்படும்.‌ இரண்டிற்கும் வேறுபாடுகள் ஏதேனும் காணப்பட்டால் அதுகுறித்து விசாரணை‌ நடத்தப்படும். நாட்டில் ஒவ்வொரு மனிதனின் ஒட்டுமொத்த வருவாய் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கு வருமானவரித்துறை பல நடவடிக்கைகளை எடுத்து ‌வருகிறது. ஏற்கனவே பான் அட்டையை ஆதாருடன் இணைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சமூக வலைதளங்களிலிருந்து திரட்டப்படும் தரவுகள் ஓவ்வொருவரின் வருவாயை கணக்கிட‌ பயன்படுத்தப்படவுள்ளது. உதராணமாக ஒருவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் விலையுயர்ந்த ஒரு காரை வாங்கியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டால், அது அவருடைய வருமானவரி கணக்கிற்கு ஒத்துப் போகிறதா என வருமானவரித்துறையால் கண்டறிய இயலும். இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் நாட்டில் வரி ஏய்ப்பை தடுப்பதுடன் கருப்பு பண புழக்கத்தையும் பெருமளவு குறைக்கமுடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.