இந்தியா

மூன்றாம் நபருக்கு வாடிக்கையாளர்களின் விவரங்களை பகிர்கிறதா பேடிஎம்?

rajakannan

பேடிஎம் 2010ல் தொடங்கப்பட்ட இணைய வணிக நிறுவனமாகும். இந்நிறுவனம் ஒன் நைன் செவன் கம்யூனிகேஷன்ஸ் ஆல் நிறுவப்பட்டது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பொறுத்த வரையில் பேடிஎம் செயலி மக்கள் மத்தியில் பெரும் பங்கு வகித்து வருகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்த போது, இந்தியா முழுவதும் ரொக்கப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் மக்கள் தவித்தனர். அனைவரையும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் கொண்டு வருவது பிரதான நோக்கம் என்று அரசு அறிவித்தது. இந்தச் சூழ்நிலையை நிதித்துறை தொழில் நிறுவனமான பேடிஎம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு பேடிஎம் கிடுகிடுவென பெரிய நிறுவனமாக வளர்ந்தது. மக்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்தது. சாதாரண மக்களும் தங்களது வணிக பரிவர்த்தனை சேவைக்காக பேடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். 

நாடு முழுவதும் பேடிஎம்க்கு தற்போது 30 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், தங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை பேடிஎம் நிறுவனம் மூன்றாவது நபருக்கு பகிர்வதாக செய்திகள் வெளியானது. இந்தச் செய்திகளை பேடிஎம் நிறுவனம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக பேடிஎம் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், “நாங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை மூன்றாவது நபருக்கு பகிர்வதாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் உண்மை எதுவும் இல்லை. 

நாங்கள் எந்தத் தனி நபருக்கோ, எந்த அரசுக்கோ அல்லது எந்த நாட்டிற்கோ  வாடிக்கையாளர்களின் தகவல்களை பகிரவில்லை. பேடிஎம் இல் உள்ள உங்கள் தகவல்கள் உங்களுடயது தான். அது எங்களுடையது அல்ல. அதேவேளையில் 3வது நபர் அல்லது அரசுடையது அல்ல” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.