இந்தியா

“நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ சோதனை செய்தால் மர்மம் விலகும்” - மகள் அனிதா போஸ்

webteam

ஜப்பானில் உள்ள நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ. சோதனை செய்ய வேண்டும் என நேதாஜியின் மகள் அனிதா போஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேச தியாகிகளுள் ஒருவரான நேதாஜி, கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாகவும், அவர் உடல் எரியூட்டப்பட்டு அதன் சாம்பல் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி புத்த கோவிலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆண்டுகள் கடந்தாலும் இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணமே இருக்கிறது. 

இந்நிலையில், நேதாஜியின் மகளான அனிதா போஸ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ஜப்பானில் உள்ளதாக கூறப்படும் நேதாஜியின் சாம்பலை எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக இந்திய அரசும், ஜப்பான் அரசும் உரிய முடிவு எடுக்க வேண்டும். அப்படி செய்தால் நேதாஜி மரணத்தின் மர்மம் விலகி விடும்.

மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நேதாஜியின் மரணம் தொடர்பான ஆவணங்களை வகைப்படுத்தி வெளியிட்டார். அதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி கூற விரும்புகிறேன். ஜப்பானில் உள்ள நேதாஜியின் சாம்பல் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என உறுதி அளித்திருந்தார். 

ஆனால், மத்தியில் ஆண்ட முந்தைய அரசுகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. முறையான ஆவணங்களை வகைப்படுத்தி இருந்தால் இப்படிப்பட்ட சந்தேகங்கள் இன்றளவும் எழாமல் இருந்திருக்கும். எனவே, நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ பரிசோதனைக்கு விரைவில் உட்படுத்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.