இந்தியா

இளங்கலை நீட் 2022-ல் வட இந்தியர்கள் ஆள்மாறாட்டம்: சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல்

webteam

நேற்று நடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததை கண்டுபிடித்த சிபிஐ இதுதொடர்பாக 8 பேர் அதிரடியாக கைது செய்துள்ளது.

நேற்றைய தினம் நாடு முழுவதும் மருத்துவக் கல்வியில் சேர்வதற்காக அகில இந்திய மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் 18.72 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் டெல்லி மற்றும் ஹரியானாவில் ஒரு சில தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்துள்ளது. டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் முறைகேடு நடத்துவதற்கு மூளையாக செயல்பட்டவரும் ஆள்மாறட்டம் செய்த சுஷில் ரஞ்சன் மற்றும் தேர்வு எழுத அழைத்துவரப்பட்ட மாணவர்கள் தங்கி உள்ளனர். பெரிய அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு சிலருக்கு தேர்வு எழுத முடிவு செய்த நிலையில் அவர்களுடைய தேர்வு மையங்கள் ஹரியானா மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு மார்பிங் செய்யப்பட்ட ஹால் டிக்கெட் உதவியுடன் (17.07.2022) அன்று பிற்பகலில் தேர்வு எழுதப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதில்,

* சுஷில் ரஞ்ஜன் (ஆள் மாறாட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர்)

* பிரிஜ் மோகன் சிங் (கூட்டாளி)

* பப்பு (கூட்டாளி)

* உமா சங்கர் குப்த்தா (கூட்டாளி)

* நிதி (பெண், ஆழ்மரட்டம் செய்து தேர்வு எழுதியவர்)

* கிருஷ்ண சங்கர் யோகி ( ஆள் மாறாட்டம் செய்தவர்)

* சன்னி ரஞ்சன் (ஆள்மாறாட்டம் செய்தவர்)

* ரகு நந்தன் (ஆள்மாறாட்டம் செய்தவர்)

* ஜீபு லால் (ஆள்மாறாட்டம் செய்தவர்)

* ஹேமேந்திரா (ஆள்மாறாட்டம் செய்தவர்)

* பரத் சிங் (ஆள்மாறாட்டம் செய்தவர்)

* அடையாளம் தெரியாத நபர்

இதில் தீவிர விசாரணைக்குப் பிறகு முறைகேட்டுக்கு மூளையாக செயல்பட்ட டெல்லி கௌதம் விகாரை சேர்ந்த சுசில் ரஞ்சன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீதமுள்ளவர்ளை சிபிஐ அதிகாரிகள் தேடி வருகின்றனர். மேலும் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஆள்மாறாட்டம் செய்வதற்காக பல லட்சம் ரூபாய் பணம் கைமாற்றப்பட்டுள்ளதாகவும் சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து இப்படி பலரும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.