நீட் தேர்வு ட்விட்டர்
இந்தியா

நீட் மறுதேர்வு | ”வதந்திகளை நம்ப வேண்டாம்” - மாணவர்களுக்கு என்.டி.ஏ. அறிவுறுத்தல்!

மாணவர்களுக்கு உதவியாக ‘மனஸ்’ (MANAS) மனநல உதவி எண் 14416 செயல்பட்டு வருவதாகவும், உதவி தேடுவது பலவீனம் அல்ல, அது வலிமையின் அடையாளம் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.

PT WEB

நீட் மறுதேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்; வதந்திகளை நம்ப
வேண்டாம். மாணவர்கள் அமைதியாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

நீட் யுஜி 2026 தேர்வு இன்னும் 3 நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், மாணவர்கள் வதந்திகளை நம்பாமல் அமைதியாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து என்டிஏ வெளியிட்டுள்ளஅ றிக்கையில், “மாணவர்கள் கடினமாக உழைத்துத் தேர்வுக்குத் தயாராகியுள்ளனர். எனவே, தங்களது முயற்சியில் நம்பிக்கைவைத்து, அமைதியாக இருந்து சிறந்த முறையில் தேர்வை எழுத வேண்டும். அதுவே தற்போது அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு

மேலும், நீட் யுஜி 2026 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், தேர்வு ஒத்திவைக்கப்படும் என்ற வதந்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக என்டிஏ வெளியிடும் தகவல்களை மட்டுமே மாணவர்கள் நம்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் நேர்மையான தேர்வை நடத்துவதற்காக மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க பல அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் என்.டி.ஏ. தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

நீட் தேர்வு

மேலும், கடந்த மே3-ஆம் தேதி எடுக்கப்பட்ட முக்கிய முடிவு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டே மேற்கொள்ளப்பட்டதாகவும், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த முறை தேர்வு முறைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் என்டிஏ குறிப்பிட்டுள்ளது. தேர்வு அழுத்தம் அதிகமாக உணரப்படும் மாணவர்களுக்கு உதவியாக ‘மனஸ்’ (MANAS) மனநல உதவி எண் 14416 செயல்பட்டு வருவதாகவும், உதவி தேடுவது பலவீனம் அல்ல, அது வலிமையின் அடையாளம் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.