வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்த நிலையில், இதற்கான மறுதேர்வு ஜூன் 21ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை ஆண்டு தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திவருகிறது. அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே-3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில், 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதியிருந்தனர். மிகக் கடுமையான, கட்டுப்பாடான சூழலில் நடத்தப்பட்ட இத்தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். அதன்படி, ராஜஸ்தானில் தேர்வுக்கு முன்னரே நீட் வினாத்தாள் கசிந்தது வெளிச்சத்துக்கு வந்தது. வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
தவிர, வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நீட் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. மறுதேர்வுக்கான புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர், “அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் நுழைவுத்தேர்வை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஓஎம்ஆர் தேர்வுத்தாள் முறையைவிட கணினி வழித்தேர்வு முறை ஒப்பீட்டளவில் சிறந்தது. நீட் தேர்வு முறைகேடுகள் இனி நடக்காது. தேசிய தேர்வு முகமையைப் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ பாரபட்சமற்ற விசாரணை நடத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.