இந்தியா

“52 என்.சி.பி எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்” - நவாப் மாலிக்

webteam

அஜித்பவாருக்கு ஆதரவு அளித்ததாக கருதப்படும் 4 எம்.எல்.ஏக்களில் 2 பேர் டெல்லியில் இருந்து திடீரென மும்பைக்கு திரும்பியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இதனிடையே, தங்களது எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில், அஜித்பவாருக்கு ஆதரவு அளித்ததாக கருதப்படும் 4 எம்.எல்.ஏக்களில் 2 பேர் டெல்லியில் இருந்து திடீரென மும்பைக்கு திரும்பியுள்ளனர். டெல்லி அருகே ஓட்டலில் தங்கியிருந்த அனில் பாட்டீல், தவுலத் தரோதா, ஆகியோர் திடீரென மும்பை திரும்பினர். அவர்கள் இருவரும் ஹரியானா குருகிராம் ஹோட்டலில் தங்கிருந்தனர். 

இதன்மூலம் மீண்டும் அவர்கள் சரத்பவார் அணிக்கு திரும்பவுள்ளதாக தெரிகிறது. இதனிடையே தேசியவாத காங்கிரஸின் 52 எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர் எங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.