இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை ஆண்டு தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திவருகிறது. அதன்படி, 2026-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே-3 ம் தேதி நாடுமுழுவதும் நடைபெற்றது. இதில், 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதியிருந்தனர். இந்த சூழலில்தான், தேர்வுகு முன்பே ராஜஸ்தான் மாநில மாணவர்களிடையே வழங்கப்பட்ட வினா விடை வங்கியில் நீட் தேர்வு வினாத்தாளின் பெரும்பாலான கேள்விகள் இருந்தது சந்தேகங்களை எழுப்பியது. இதையடுத்து, பலரும் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்தசூழலில் தான், மே-3 தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்தான அறிவிப்பில், ”தேர்வின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, மே 3 அன்று நடந்த தேர்வு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு புகார்கள் குறித்து விரிவான மற்றும் ஆழமான விசாரணை நடத்த இந்திய அரசு இந்த விவகாரத்தை சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளது. இதற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, ”மறுதேர்வுக்கு மாணவர்கள் மீண்டும் பதிவு செய்யவோ அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. ஏற்கனவே, மாணவர்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் அவர்களுக்குத் திருப்பித் தரப்படும். மறுதேர்வுக்கான முழுச் செலவையும் NTA தனது சொந்த நிதியிலிருந்து ஏற்கும். மறுதேர்வு என்பது மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், சிதைந்து போன நம்பகத்தன்மையுடன் இந்தத் தேர்வை அப்படியே விடுவது, எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவேதான் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளோம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.