புதிதாக வகுக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார வரைவு கொள்கையில் இந்தியாவில் சுகாதார செலவுகளுக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீடான ஜிடிபி-யில் 2.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சுகாதார செலவுகளுக்கு ஜிடிபி-யில் 1 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டு வருகிறது.
நீண்ட தாமதத்திற்கு பிறகு, தேசிய சுகாதார கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மலிவு விலையில் அனைவருக்கும் சுகாதார சேவைகள் உறுதிசெய்யப்படும் என கருதப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த புதிய சுகாதாரக் கொள்கைக்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.
சுகாதார கொள்கையின் முக்கிய அம்சங்கள்:
சுகாதார செலவுகளுக்காக ஒதுக்கப்படும் தொகையின் அளவு ஜிடிபி-யில் 2.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரும் 2025-க்குள் இந்தியர்களின் சராசரி ஆயுளை 67.5 ஆண்டுகளில் இருந்து 70 ஆண்டுகளாக்க அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோய் கண்டறியும் சேவை மற்றும் மருந்துகள் இலவசமாக அளிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு 1,000 பேருக்கும் 2 மருத்துவ படுக்கை வசதியாவது இருக்க வேண்டும்.
தாய்-சேய் இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் விகிதத்தை குறைக்க வேண்டும்
சுகாதார ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்