நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -2 விண்கலத்தை செலுத்திய இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து தெரிவித்துள்ளது.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் நேற்று மதியம் சரியாக 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பலரும் ட்விட்டரில் இஸ்ரோவை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சந்திரயான் -2 விண்கலத்தை செலுத்திய இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாசா,''நிலவை ஆராய்வதற்காக சந்திரயான் -2 விண்கலத்தை செலுத்திய இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். நிலவின் தென்துருவத்தைப் பற்றி இஸ்ரோ நடத்தும் ஆய்வுகளை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம். நிலவின் தென் பகுதிக்கு விண்வெளி வீரர்களை விரைவில் அனுப்ப தாங்கள் தயாராகி வருகிறோம்’’ என கூறியுள்ளது.